Sunday 19 August 2012

சிறுமை அணியுமாம் தன்னை வியந்து! என் செய்ய?பகுதி 3

சென்ற 5.8.2012 ஞாயிற்றுக்கிழமை தினக் குரல் நாளிதழில் வெளியான எனது கட்டுரையின் (1) முதல் பகுதியைப் பதித்திருந்தேன். அதன் தொடர்ச்சி சென்ற 12.8.2012 ஞாயிற்றுக்கிழமை தினக் குரல் நாளிதழில் வெளியான (2) இரண்டாம் பகுதியையும் பதித்துள்ளேன். நிறைவாக 19.8.2012  ஞாயிற்றுக்கிழமை தினக் குரல் நாளிதழில் வெளியான (3) மூன்றாம் பகுதியையும் பதித்து நிறைவு செய்கிறேன்.

 தலைப்பு : "சிறுமை அணியுமாம் தன்னை வியந்து! என் செய்ய?"  
(பகுதி 3)

ன்றாடம் கேட்கிற கவிப்பேரரசுகள், 'தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்  ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி' என்று எழுதியவர்கள் எழுதுகிற திரைப்பாடல்களில் பிறமொழி சொற்கள் தாராளமாய் விளையாடுகின்றனவே!?  அவர்களைக் குறைகூறும் நம் நாட்டுக்
கவிஞர்கள், கவி மன்னர்களின் உள்ளூர்ப் பாடல்கள் மட்டும் என்விதிவிலக்கா? 


இவர்களில் சிலரும் அதே மட்டைகளே பாடும் பாடல்களில் வரும் ஆங்கில
மொழிக் கலப்புகள், மேலும் லகர, ளகர, ழகர உச்சரிப்புகள் படுமோசமாக
உள்ளதையாவது கவனித்து அதைச் சரிசெய்தால்தான் ஒலியேற்றுவோம் என
அரசாங்க வானொலியின் பொறுப்பாளர்கள் கண்டிப்பாகச் சொல்வார்களா
'
கையிலே பணமிருந்தால் கழுதைகூட அரசனடி..' என்பதுபோல, ஏதாவது
நீட்டிவிட்டால் 'லகர'மாவது, நரகமாவது;
எல்லா தர்மங்களும், எல்லா
நியாயங்களும் மறந்துபோகும்!


இவற்றைக் கேட்கிற நேயர்கள் மொழிக்கலப்படம் செய்வது குறித்து ஆய்வில்
இறங்குவதற்கான நிலையில் இல்லை எனவே, சாதாரண மக்களை, வாசகர்களை மொழிக் கலப்படம் குறித்து கண்டிப்பதில் எந்த நியாயமும் இல்லை.  இது குறித்து சிந்திக்கவேண்டியவர்களே விருதுகளுக்கும், பதவிகளுக்கும் மண்டியிடுகிறபோதுஇவர் கண்டனம் எழுப்பி என்ன பலன் வரப்போகிறது

ஒரு சமயம், சரியான விபரம் தெரியாத நிலையில், அதை ஆய்ந்து அறியாமல்
என்னை, 'இவன் ஒரு பருப்பு - செருப்பு' என்று வசைபாடியவர்கள் -  தமிழ் நெறியில்  இருந்து நெறியுடன் பேசி சிறப்புடன் வாழ்பவர்கள் என சொல்லிக் கொள்ளும் ஒரு  சிலரே!!!  அதற்காக அந்த அற்புதமான நல்லியக்கத்தை நாம் தூற்றலாகுமாஅதன் தலைவருக்கும் எனக்கும் நல்ல நெருங்கிய நட்பு இன்றுவரை இருக்கிறது ஒரு சில கருங்காலிகள் எங்கும் இருப்பார்கள் அந்தவகையில் சிலவற்றைப் பெரிதுபடுத்தி வாதத்தைத் திசை திருப்பி வாசகர்களைப் பந்தாடும் சில கருங்காலிகளும் எங்கும் இருப்பார்கள் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும்.

மேடைகளில் முழங்குகிற, பத்திரிகைகளில் எழுதுகிற தமிழக மற்றும் மலையகத்தின் பல சமூக இயக்கத் தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தமிழுக்கு ஒன்றெனில் ஓடோடி வந்து குரல் கொடுக்கும் தமிழர்கள் பலரது வீட்டில் தமிழ் ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டுள்ளது!  அவர்கள் குழந்தைகளின் நாவில் பிறமொழி ஆட்சி செய்வது நேரில் பார்க்கக்கூடிய காட்சி! 

தான் எழுதுகிற, பேசுகிற சொல்,
தமிழ்ச்சொல்லா அல்லது பிறமொழிச் சொல்லா என்று தெரியாமல் பிரயோகிக்கும் வாசகனை அன்பால் திருத்துவதை விடுத்து அவர்கள்மீது பாய்வதில் என்ன நியாயம் இருக்கிறதுஇந்தப் பாய்ச்சலும் கோபமும் காட்டப்படவேண்டிய இடம் வேறு! அது பெரிய இடம் என்பதால் மெலியவர்கள் மீது கோபத்தைக் காட்டுவது நியாயமாகப் படவில்லை!  மேலும், ஒரு கதையில் வரும் கதாபாத்திரத்தின் இயல்பு நிலைக்கேற்ப பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பது என்பதுதானே கதைக்கு உயிரோட்டம்!   

"டேய்.. (அல்லது பெயர் குறிப்பிட்டு) 'பஸ்'சு  வந்திடுச்சி, சீக்கிரமா 'சைக்கிள' ஓட்டுடா, புடிக்கணும்" என்று பின்னால் அமர்ந்து  செல்லும்  ஒரு தந்தை இயல்பாகத் தன் மகனிடம் சொல்வாரா அல்லது, "கனேபேருந்து வந்து விட்டது, விரைவாகத் துவிச்சக்கர வண்டியை ஓட்டு, பிடிக்கவேண்டும்"
என்று கூறுவாரா?  கதையைச் சொல்லும் கதாசிரியர் வேண்டுமானால் நல்ல தமிழில்  கதையை நகர்த்தலாம்.

தமிழை தமிழர்கள் மட்டும் உரம் போட்டு வளர்க்கவில்லை.  பெஸ்கி (வீரமாமுனிவர்), ஜி.யு.போப் என்று தொடரும் அந்நியர்கள் உட்பட கோ.சா.,.வெ.ரா. போன்ற தெலுங்கர், மலையாளிகளும் தமிழுக்குத் தொண்டாற்றிருக்கிறார்கள், ஆற்றியும் வருகிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி என்ற உண்மையை கலைஞர்  சொன்னபோதும் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அவர்தான் சட்டமாக்கினார்.
தமிழுக்கு ஒரு 'தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்' கண்டார்அவர் இருக்கும்வரை ஈழத் தமிழர்களுக்கு இன்றுவரை எவரும் செய்யாத அளவுக்கு அதிகமாகச் செய்தார்.

இங்கே, மலேசியாவில் 'டேவான் பாகாசா டான் புஸ்தகா' என்றொரு அமைப்பு
இருக்கிறது.  அது மலாய் மொழி வார்த்தைகளை, சொற்களை செப்பணிடுகிறது. தமிழக அரசு என்ன செய்கிறது?  குஷ்புவின் முற்போக்குக் கருத்துகளோடு(?)  முத்தமிட்டுக் கொண்டிருக்கிறது!  இங்கேயாவது ஏதும் செய்யலாமே

மலையாளம் மொழி என்பதே - ஆதி தமிழ், நல்ல தமிழ்.  "செய்திகள், வாசிக்குன்னது  உன்னி கிருஷ்ணன்" என்பதே நல்ல தமிழ்தானே? மேலும், பரவாயில்லை என்பதற்கு,  'தரக்கேடுல்லா' என்று மலையாளத்தில் சொல்லப்படும் வார்த்தைதான் அசல் தமிழ்.  ஆனால் இதுபோன்ற பல நல்ல தமிழ் வார்த்தைகள் மலையாளத்தில் கோலோச்சுகிறது!  வேற்றுமொழியான, உருது வார்த்தையான 'பரவாயில்லை' நமக்குத் தமிழாக வாழ்வது  எத்தனைப் பேருக்குத் தெரியும்?   ஆனால், ஏதோ காரணங்களுக்காக, (அதைச் சொல்ல
இன்னும் நிறைய பக்கங்கள் வேண்டும்) அவர்கள் எழுத்தச்சனால் எழுத்துகள்
உருவாக்கப்பட்டு, தனி மொழியாக நிலை நிறுத்திக் கொண்டார்கள்.
திருக்குறளில் "வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம் உள்ளத்து அனையது  உயர்வு" என்று தெய்வப் புலவர் சொல்லியிருக்கிறார்அதில் வரும் அந்த 'வெள்ளம்' என்ற நல்ல தமிழ்ச்சொல்லை இப்பொழுது பயன்பாட்டில் வைத்திருப்பவர்கள் யார்? நீர், தண்ணீர், தண்ணி என்று மட்டும்தானே சொல்கிறோம்!  தண்ணீர் எங்காவது கரைபுரண்டோடும்போது மட்டும் 'வெள்ளப்பெருக்கு' என்று சொல்கிறோம்.  அந்த நல்ல சொல்லை விட்டது யார்?  வைத்துக்கொண்டது யார்?  இப்படியாக எத்தனை எத்தனையோ நல்ல தமிழ்ச்சொற்கள் மற்ற மொழிக்காரர்களால் கோலோட்சிக் கொண்டிருக்கிறது
மலையாள மொழியின் வயதே சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கும் மேல்தான்இவ்வாறுதான் தெலுங்கும், கன்னடமும் தனிமொழியாக ஆகின

'காப்பி' அடித்தல் என்ற வார்த்தையை சொன்ன வாசகருக்கு பதில்கூறும் தருவாயில்கூட....... "கருத்துற்றதன் அடிப்படையில்தான் 'காப்பி' அடிக்கிறேன்." என்று அவரும்  பிறமொழிச் சொல்லைப் பிரயோகப் படுத்தியிருக்கிறார்.  'பின்பற்றியிருக்கிறேன், பார்த்தெழுதியிருக்கிறேன், மாதிரி எடுத்தேன்' என்றோ அல்லது அவருக்குத் தெரிந்த இன்னும் சரியான தமிழிலோ அந்தக் 'காப்பி'க்குப் பதில் நல்ல தமிழை அந்த வாசகருக்கு ஊட்டியிருக்கலாமல்லவா?

எது எப்படியோ, 'சாண் ஏறினால் முழம் சருக்கல்' என்ற நிலையில்தான் இங்கும்  சரி, தமிழகத்திலும் சரி தமிழின் நிலை இருக்கிறதுதமிழ்ப் பற்றாளர்களின் வீட்டுப் பிள்ளைகளே அதற்குச் சான்று பகர்கின்றனர் என்பதே வேதனைக்குரிய செய்தி!

இதை உணர்வார் யார்?  உணர்ந்தாலும் அதைப்பற்றிப் பேசமாட்டார்கள்மூடி
மறைத்துக்கொண்டு, ஊருக்கு உபதேசம் செய்வதில் வல்லவர்கள் நம் தமிழ்ப்
பற்றாளர்கள் என்பதே உண்மை என்பதை அவரும் அறிவார்.  சிறுமதியாளர்
வீண் பெருமை அதுதானே! - என் செய்ய?

நாங்களும் எழுதி படிப்படியாக வளரவேண்டும் என்று வரும் வளரும் பயிர்களுக்குத்  தண்ணீர் ஊற்றாவிட்டாலும், பிறமொழிக் கலப்பு என்ற பெயரில் வெண்ணீர் ஊற்றிச் சாகடித்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

மெனக்கெட்டு, சில தேடல்களுக்குப்பின் இக்கட்டுரையை எழுதுகிறேன்.  எல்லாமே தமிழின்பால் எனக்குள்ள ஈர்ப்பால், உணர்வால் பகர்ந்துள்ளேன். 
இதில் தப்பித்தவறி  குற்றங்குறைகள் ஏதாவது இருப்பின் அன்புகூர்ந்து பொறுத்தருள வேண்டும்.

நிறைவாக, தீவிரவாதிகளையும், தீவிரவாதப் போக்குடையவர்களையும் யாரும் விரும்பமாட்டார்கள்அது மதமாகட்டம், இனமாகட்டும் அல்லது மொழியாகட்டும் எல்லாவற்றிற்கும் அது பொருந்தும்!


                                                       ***முற்றும்***
அன்புடன்,

பாலகோபாலன் நம்பியார்,
கிள்ளான் மாவட்டத் தமிழ் வாசகர் எழுத்தாளர் இயக்கம்.

No comments:

Post a Comment