Thursday 11 October 2012

விடியலை எழுப்பிவிடு!

விடியலை எழுப்பிவிடு!

நிலவு வந்தவிதமும்
தெரியவில்லை
நின்ற இடமும்
தெரியவில்லை
சென்ற சுவடும்
தெரியவில்லை!

படுக்கைக்குச் செல்லுமுன்

நன்றாகக் குறி
வைத்துத்தானே சென்றேன்...!
எப்படி நகர்ந்தது?
ஏன் நகர்ந்தது?

ஓ... நானும்
நகர வேண்டும்...
அதைத்தான்
சொல்லாமல்
சொல்கிறதோ...?

"இல்லையேல் செத்த
பிணம்போல்..."
என்று உவமை
கூறிவிடுவார்களோ...!
ஆணி அடித்துத்
தொங்கவிட்டு விடுவார்களோ
சுவற்றில்...!

அதென்ன 'செத்த பிணம்'...?
செத்த பிறகுதானே
பிணம்!
'பிணம்' என்று
சொல்வதுதானே
உத்தமம்...!

அதோ...
கதிரவன்
தன் கண்சிமிட்டி
கதிர்களைப் பாய்ச்ச
வந்துவிட்டான்...!

பூமியில்
கதிர்கள் செழிக்க
அவன்தானே
காரணம்...!
அதனால்தானோ
'கதிரவன்' என்ற
காரணப் பெயர்
கொண்டான்...?
இருக்கும்.. இருக்கும்

அடடா...
நினைத்துப் பார்ப்பதற்குள்
கிழக்கின் கீழே
பார்த்த பகலவன்
அதோ...
மேற்கு நோக்கி
எழுகிறான்...
பகல்-அவன்
எழு-கதிர்
ஆஹா...

குறி வைத்த
இடத்திலிருந்து
நிலா சென்றதெங்கே
என்று தேடினேன்...
"அதுவும் என்னைப்போல்
சுறுசுறுப்பாக
நகர்ந்துவிட்டது"
என்று சூடாகச்
சொன்னது சூரியன்.

ஓஹோ...
இனி பிரபஞ்சத்தின்
வேகம்போல்
நானும் செயல்பட
வேண்டும்போலும்!
ஜடப்பொருள்கள்
மட்டும்தான் நகரா...!
பிணமா நான்...?

புயலாய் வேண்டாம்...
தென்றலாய்
உலா வரலாமே...
இதோ நாளைமுதல்
நானே விடியலை
எழுப்புகிறேன்!

1 comment:

  1. விடிய விடிய தூங்காமல் வானத்தையே வெரித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப்போல் இருக்கே...
    அருமை... தொடருங்கள்.

    ReplyDelete